அமெரிக்கா - ஈரான் மோதல் தீவிரம்: உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் தீவிரப் போர் வெடித்துள்ளதால், சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த ஜூன் 17-ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான தற்காலிக அமைதி ஒப்பந்தம், ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட எல்லைக் கட்டுப்பாட்டு மோதல்களால் தற்போது அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் உத்தரவின் பேரில், அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைச் சூழ்ந்து முற்றுகையிட்டுள்ளன. ஈரானின் தலைநகர் டெஹ்ரான் மற்றும் முக்கிய ராணுவத் தளங்களைக் குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வரும் நிலையில், ஈரானிய ராணுவமும் பதிலடித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான இந்தத் தீவிர மோதலால், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா, சீனா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளுக்குச் செல்லும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவிலிருந்து மாற்றுப் பாதையான செங்கடலின் பாப் அல் - மண்டேப் ஜலசந்தி வழியாக எண்ணெய் ஏற்றுமதி நடைபெற்று வந்தாலும், அங்கேயும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தடையை ஏற்படுத்த முயன்று வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஒட்டுமொத்தப் பிராந்தியப் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களுக்கு வரலாறு காணாத தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
AthibAn Tv