தொகுதி மறுவரையறை: அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்!
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில், தொகுதி மறுவரையறையை உள்ளடக்கிய அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ள நிலையில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, அதில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. இதுதொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கும் ஏற்கனவே கடிதம் எழுதப்பட்டுள்ளதை கார்கே தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மக்களவையில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இடப் பகிர்வு மாற்றம் காரணமாகத் தங்களின் பிரதிநிதித்துவம் குறையுமோ என்ற கவலையைத் தென் மாநிலங்கள் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றன. எனவே, இந்தத் தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை விரிவாகக் கலந்தாலோசிக்க வசதியாகப் பிரதமர் மோடி உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.

AthibAn Tv