விசாரணை கைதி கொலை வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் - தொல். திருமாவளவன் கோரிக்கை!
திருவாரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, நாகர்கோவிலில் விசாரணை கைதி சபரிவர்மன் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்துப் பேசிய அவர், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையைத் தமிழக அரசு உடனடியாக ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், தமிழகத்தில் தற்போதுள்ள தவெக அரசு 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் என்றும், இது மக்களின் கட்டளை என்பதால் இந்த ஆட்சி கவிழ்வதற்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், சேலம் மற்றும் மதுரையில் விசிக போஸ்டர்கள் தொடர்ச்சியாகக் கிழிக்கப்பட்டு வருவதற்குக் கண்டனம் தெரிவித்தார். "நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் இல்லை; இருப்பினும், சமூக விரோத சக்திகள் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுவது கவலையளிக்கிறது" என்றார். நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் திறக்கப்படாது என்ற முந்தைய அரசின் முடிவையே இந்த புதிய அரசும் பின்பற்றும் என நம்புவதாகவும், விரைவில் தவெக தலைமையில் ஒரு பலமான கூட்டணி அமையும் என்றும் தெரிவித்தார்.
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக விவாதிக்கத் தமிழக முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார். மேலும், தமிழகத்தில் 14-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், "ஏற்கனவே இருந்த அரசு, முதல்வரே பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் சட்டத்தை நிறைவேற்றி அனுப்பியுள்ளது. அந்த நிலைப்பாட்டில் தற்போதைய அரசும் உறுதியாக இருக்க வேண்டும்; புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கான நடைமுறைகளைத் தமிழக அரசு உடனடியாகத் தொடங்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.

AthibAn Tv