"புற்றுநோய் அபாயம்!" - சந்தைகள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் பொருட்காட்சிகளில் கலர் அப்பளம் விற்பனைக்குத் தடை!
தமிழகத்தில் உள்ள வாராந்திர சந்தைகள், புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள், பொருட்காட்சி வளாகங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் ரசாயன நிறமூட்டிகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் கலர் அப்பளங்கள் மற்றும் வடாங்கள் விற்பனைக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடியாகத் தடை விதித்துள்ளது. குழந்தைகளைக் கவரும் வகையில் விதவிதமான வண்ணங்களில் விற்கப்படும் இந்த அப்பளங்களில், தடை செய்யப்பட்ட செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படுவதாக எழுந்த தொடர் புகார்களை அடுத்து, அதிகாரிகள் நடத்திய ஆய்வகப் பரிசோதனையில் இவை அனைத்தும் உடலுக்குப் பாதுகாப்பற்றவை என்பது கண்டறியப்பட்டதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உணவுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை உத்தரவில், "செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்படும் கலர் அப்பளங்களை நீண்ட காலம் உட்கொள்வதால் புற்றுநோய் கட்டிகள் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது. இவை செரிமான மண்டலத்தைப் பாதித்து வயிற்றுப் புண், குடல் பாதிப்புகளை உண்டாக்குவதோடு, தரம் குறைந்த இந்த ரசாயனங்கள் உடலில் இருந்து எளிதில் வெளியேறாமல் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டையும் முடக்குகின்றன. மேலும், குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் கவனச்சிதறலை உண்டாக்கும் ஆபத்தும் இதில் உள்ளது" என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, தயாரிப்பாளர்கள் மற்றும் வியாபாரிகள் விதிகளுக்குப் புறம்பாக நிறமூட்டிகளைப் பயன்படுத்தி அப்பளம் தயாரித்து விற்பனை செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பெற்றோர்களும் தங்களின் குழந்தைகளுக்குக் கலர் அப்பளங்களை வாங்கித் தருவதைத் தவிர்த்து, இயற்கையான முறையில் உளுந்து மற்றும் அரிசியைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பாரம்பரியமான அப்பளங்களைப் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

AthibAn Tv