"தவெகவில் இணைவோர் தூய்மையானவர்கள் என சான்றளிக்க முடியாது, ஆனால்..." - மாணிக்கம் தாகூர் பேட்டி!
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கச்சத்தீவு விவகாரம் மற்றும் தமிழக அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசினார். அப்போது, சமீபத்தில் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பஞ்சாயத்துத் தலைவரை உடனடியாகக் கட்சியில் இருந்து நீக்கிய தவெக அரசின் ‘ஜீரோ கரப்ஷன்’ கொள்கையைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து தவெக கட்சி சேர்க்கை குறித்துப் பேசிய அவர், "மாற்றுக் கட்சிகளில் இருந்து தவெகவில் இணைபவர்கள் எல்லோரும் தூய்மையானவர்கள் என்று நாம் சான்றளிக்க முடியாது. ஆனால், தவெக தலைவர் நேர்மையான அரசியல் செய்ய விரும்புகிறார், தொண்டர்களும் நேர்மையை விரும்புகிறார்கள்" என்று குறிப்பிட்டார். மேலும், மத்திய அரசின் தொகுதி மறுவரையறை, புதிய கல்வித் துறை சட்டங்கள் போன்றவற்றை ஒட்டுமொத்த தமிழகமே எதிர்ப்பதாகவும், நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகள் பிரச்சினை அடிப்படையில் ஒருமுகமாக முடிவெடுப்பார்கள் என்ற முழு நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் கூறினார்.
மத்திய அரசு மீதான விமரிசனங்களைத் தொடர்ந்த அவர், 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதி ஒதுக்கீட்டில் சுமார் 5,000 கோடி ரூபாயை மத்திய அரசு குறைத்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். இதனால் தமிழக அரசு தனது சொந்த பட்ஜெட்டில் இருந்து நிதி வழங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்போம் என்றார். கர்நாடகாவின் மேகேதாட்டு அணை விவகாரத்தில் மோடி அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்ட முடியாது என்பதால், மத்திய அரசு இதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
இறுதியாக, அயோத்தி ராமர் கோயில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டவர்களைக் காப்பாற்ற பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், கச்சத்தீவு விவகாரம் குறித்தும் பேசினார். "அன்றைய சர்வதேச சூழல் மற்றும் அண்டை நாட்டு உறவுகளின் நன்மையைக் கருதியே அப்போதைய மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது. அந்த முடிவு அப்போதைய சூழலுக்குச் சரியானதுதான் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. அதைத் திரும்பப் பெற வேண்டிய அவசியம் இல்லை" என்று மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாகக் கூறினார்.

AthibAn Tv