“அதிமுக இப்போது ஒரு கார்ப்பரேட் கம்பெனி!”: எடப்பாடி பழனிசாமியை சாடி தவெக அமைச்சர் செங்கோட்டையன் சாடலாகப் பேச்சு

Dina AthibAn
0

“அதிமுக இப்போது ஒரு கார்ப்பரேட் கம்பெனி!”: எடப்பாடி பழனிசாமியை சாடி தவெக அமைச்சர் செங்கோட்டையன் சாடலாகப் பேச்சு

மாமல்லபுரம்: "எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக இருந்த அதிமுகவை, தற்போது எடப்பாடி பழனிசாமி ஒரு பெரு நிறுவனமாக (கம்பெனியாக) மாற்றிவிட்டார்" என்று தவெக மூத்த தலைவரும், தமிழக வருவாய்த்துறை அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், திமுகவோடு திரைமறைவில் கைகோர்த்து மீண்டும் முதல்வராகலாம் என எடப்பாடி பழனிசாமி கனவு காண்பதாகவும், அந்தத் துரோகத்தை சகித்துக் கொள்ள முடியாமல்தான் நல்லவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறி தவெகவில் இணைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

தனது உரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் விஜய் குறித்தும் செங்கோட்டையன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். "பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் வந்தவன் நான். இன்றும் என் சட்டைப்பையில் ஜெயலலிதாவின் புகைப்படம் இருக்கிறது; அதைத் தவெக தலைவர் விஜய் பெருந்தன்மையோடு அனுமதித்துள்ளார். ஆனால், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் படம் இல்லையென்றால் ஒருவரை மதிக்க மாட்டார்கள். நான் அதிமுகவிலிருந்து தூக்கி எறியப்பட்டபோது, என்னை தாங்கிப் பிடித்து இன்று வருவாய்த்துறை அமைச்சராக்கியவர் விஜய்" என்று அவர் நெகிழ்ந்தார். மேலும், ஜெயலலிதாவை 21 நாட்கள் சிறையில் அடைத்த சதிகாரர்களுடன் (திமுக) கூட்டணி வைக்கத் துடிக்கும் எடப்பாடியின் சதியைத் தகர்த்தெறியவே இந்த முக்கியத் தலைவர்கள் தவெகவை நோக்கி வந்துள்ளனர் என்றும், தவெகவில் மட்டுமே உண்மையான நம்பிக்கையும் எதிர்காலமும் உள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

அதிமுகவின் தற்போதைய நிலையை விமர்சித்த அவர், "எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோனதால் எடப்பாடி பழனிசாமிக்கு இப்போது தேசியக்கொடி பறக்கும் காரோ, அரசு வீடோ இல்லை. அதனால்தான் கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்தப் பார்க்கிறார். அவர் நடத்தும் கூட்டங்களில் இளைஞர்கள் இல்லை; ஆனால் தவெகவில்தான் பெரும் இளைஞர் பட்டாளம் அலைகடலெனத் திரண்டுள்ளது" என்றார். மேலும், ஜோதிடக் கணிப்புடன் தனது உரையை நிறைவு செய்த அவர், விஜய் முதல்வராகப் பொறுப்பேற்று இன்றுடன் 54 நாட்கள் (கூட்டு எண் 9) நிறைவடைவதைச் சுட்டிக்காட்டி, எண் 9 என்பது நவக்கிரகங்களைக் குறிக்கும் என்றும், தவெகவில் 'குரு' இருக்கும் வேளையில், அதிமுகவை 'சனி' பிடித்துள்ளதால் குருவை நம்பி வந்தவர்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றும் பேசினார். இந்த விழாவில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில், தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுக்குக் கட்சித் துண்டு அணிவித்து முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!