“முன்மாதிரி தொகுதியாக மாறும் பெரம்பூர்!”: மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் நேரில் ஆய்வு

Dina AthibAn
0

“முன்மாதிரி தொகுதியாக மாறும் பெரம்பூர்!”: மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் நேரில் ஆய்வு

சென்னை: தமிழக முதல்வர் விஜய் வெற்றி பெற்ற பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதற்கான விரிவான வளர்ச்சிப் பணிகளைச் சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சாத்தியக்கூறுகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் நேற்று நேரில் சென்று விரிவான கள ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை சுமார் 20 ஆண்டுகாலமாக, இத்தொகுதியில் வென்ற எம்.எல்.ஏ-க்களால் போதிய வளர்ச்சித் திட்டங்களை முழுமையாகக் கொண்டுவர முடியாத சூழல் நிலவியது. கூட்டணிக் கணக்குகள் மற்றும் அரசியல் மாற்றங்களால் இத்தொகுதி நீண்ட காலம் ஆளுங்கட்சியின் நேரடிப் பங்களிப்பு இல்லாமல் பின்தங்கியே இருந்தது. ஆனால், தற்போது இத்தொகுதி ‘முதல்வர் தொகுதி’ என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளதால், சென்னை மாநகராட்சி இதற்குப் பிரத்யேக முக்கியத்துவம் அளித்து தரம் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், பெரம்பூர் தொகுதி மக்களின் நீண்டகால தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. அதன்படி, முத்தமிழ் நகரில் புதிய சமுதாய நலக்கூடம், முல்லை நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வடக்கு அவென்யூ சாலையில் ஒரு நவீன உணவு வளாகம் (Food Court) ஆகியவை அமைக்கப்படவுள்ளன. மேலும், பொதுமக்களின் சுகாதார நலனைக் கருத்தில்கொண்டு சத்தியமூர்த்தி நகரில் புதிய பன்னோக்கு மருத்துவமனை ஒன்றைக் கட்டவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை அருகே பிரம்மாண்ட ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் அமைக்கப்படவுள்ளது. இதில் அதிநவீன கால்பந்து மைதானம், கிரிக்கெட் வலைப் பயிற்சி தளம், இறகுப்பந்து மற்றும் கைப்பந்து மைதானங்கள் ஆகியவை இடம்பெறவுள்ளன. இந்த இடங்களை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், பணிகளை விரைவாகவும் தரமாகவும் தொடங்குவது குறித்து அதிகாரிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது, இணை ஆணையர் (பணிகள்) செ.சரவணன், மத்திய வட்டார ஆணையர் எச்.ஆர்.கவுஷிக் மற்றும் மண்டல அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!