“வண்ணக் குறியீடு மூலம் அரசு வேலையை விலை பேசுகிறதா விஜய் அரசு?” - பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அதிரடி கேள்வி!

Dina AthibAn
0


“வண்ணக் குறியீடு மூலம் அரசு வேலையை விலை பேசுகிறதா விஜய் அரசு?” - பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் அதிரடி கேள்வி!

சென்னை: "தமிழக அரசு நடத்திய உதவிப் பேராசிரியர்கள் தகுதித் தேர்வில் சிலரது மதிப்பெண்கள் மட்டும் நீலம் மற்றும் மஞ்சள் வண்ணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது மாபெரும் முறைகேடுகளுக்கான அறிகுறிகளாகத் தெரிகிறது. இதன் மூலம் தகுதியுள்ள பட்டதாரிகளின் அரசு வேலையை ஜோசப் விஜய் அரசு விலை பேசுகிறதா?" என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மிகக் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளார்.

உதவிப் பேராசிரியர் தேர்வில் குளறுபடிகள்:

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நீண்ட நாட்களாக நிலவி வரும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழக அரசு சார்பில் அண்மையில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வின் முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் வெளியீட்டில் ஏகப்பட்ட முறைகேடுகளும் குளறுபடிகளும் அரங்கேறியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து வானதி சீனிவாசன் தனது அதிகாரபூர்வ 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை பின்வருமாறு:

"0 மதிப்பெண் பெற்றவர் 15 மதிப்பெண்ணாக மாறியது எப்படி?"

"அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர்கள் தகுதித் தேர்வில் மதிப்பெண்கள் வழங்குவதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருப்பதாகவும், அதில் சிலரின் மதிப்பெண்கள் மட்டும் நீலம் மற்றும் மஞ்சள் வண்ணக் குறியீடுகளுடன் (Color Coding) தனித்துக் காட்டப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன.

குறிப்பாக, முதல் தாளில் (Paper-1) மிக நல்ல மதிப்பெண்களைப் பெற்ற தகுதியான பலருக்கு, இரண்டாம் தாளில் (Paper-2) '0' மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. அதைவிடக் கொடுமையாக, முதற்கட்ட தேர்வு முடிவுகளின்படி '0' மதிப்பெண் பெற்றிருந்த ஒருவருக்கு, பின்பு '15' மதிப்பெண்களாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இப்போது குறிப்பிட்ட சிலரது மதிப்பெண்கள் மட்டும் வேறு நிறங்களில் 'நோட்' செய்யப்பட்டுள்ளது."

"காங்கிரஸார் வசம் உள்ள துறையில் முறைகேடு" - வானதி சாடல்:

தொடர்ந்து தனது எக்ஸ் பதிவில் விமர்சித்துள்ள அவர், "இவையெல்லாம் ஏதோ தற்செயலாக நடந்த தவறுகளாகத் தெரியவில்லை. திரைமறைவில் நடந்துள்ள மாபெரும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கான தெளிவான அறிகுறிகளாகவே தெரிகின்றன. அதிலும் குறிப்பாக, மக்களின் உழைப்பைச் சுரண்டுவதில் நீண்ட பாரம்பரியமும் பெயரும் போன காங்கிரஸாரின் கைவசம் இத்துறை (உயர்கல்வித் துறை) இருக்கும்போது, அங்கு இத்தனை குளறுபடிகள் தொடர்ந்து நடப்பதை நாம் அவ்வளவு எளிதாகக் கடந்து போய்விட முடியாது" என்று கூட்டணியைக் குறிவைத்துத் தாக்கியுள்ளார்.

முதலமைச்சர் விஜய்க்கு நேரடி சவால்:

"எனவே, தங்களை எப்போதும் ஊழலுக்கு எதிரான தூய்மையானவர்களாகப் பொதுவெளியில் முன்னிறுத்திக் கொள்ளும் முதலமைச்சர் விஜய், அரசு கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் எழுந்துள்ள இந்தக் குழப்பங்களுக்கும், முறைகேட்டுக் குற்றச்சாட்டுகளுக்கும் தகுந்த ஆதாரங்களுடன் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும். பல ஆண்டுகளாக அரசு வேலையை மட்டுமே நம்பிக் காத்துக்கொண்டிருக்கும் தகுதியுள்ள ஏழைப் பட்டதாரிகளின் பேராசிரியர்க் கனவுகள் நனவாவதை இந்த அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும்" என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

உதவிப் பேராசிரியர் தேர்வு முடிவுகளில் 'வண்ணக் குறியீடு' இடப்பட்ட விவகாரத்தை முன்வைத்து, ஆளும் தவெக அரசுக்கு எதிராகப் பாஜக இத்தகைய கடுமையான குற்றச்சாட்டைக் கிளப்பியிருப்பது தமிழக அரசியல் மற்றும் கல்வி வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

AthibAn Tv

கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!